பா.ஜ.க நாடாளுமன்றக் குழுக் கூட்டம் பிரதமர் மோடியின் தலைமையில் ஜூலை 25-ம் தேதி நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி எதிர்க்கட்சிகள் குறித்துப் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்துப் பேசினார். அதில், “இதுநாள் வரையில் நான் இது போன்ற இலக்கற்ற எதிர்க்கட்சியினரைப் பார்த்ததில்லை. ‘இந்தியா’ என்ற பெயருக்காக அவர்கள் தங்களையே புகழ்ந்துகொள்கிறார்கள்.
கிழக்கிந்திய கம்பெனி, இந்தியன் முஜாகிதீன், பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா போன்றவற்றிலும் `இந்தியா’ என்ற பெயர் இருக்கிறது. அதனால், ‘இந்தியா’ என்ற பெயரால் ஒன்றும் ஆகிவிடாது. நாட்டின் பெயரை மட்டும் வைத்துக்கொண்டு மக்களைத் தவறாக வழிநடத்த முடியாது” எனக் கடுமையாகச் சாடினார்.
அதைத் தொடர்ந்து, அவர் பங்கேற்கும் பெரும்பாலான கூட்டங்களில் எதிர்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணியை விமர்சித்துவருகிறார். இதற்கு எதிர்க்கட்சிகள் பதிலளித்து வருகின்றன. திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி டெரிக் ஓ பிரையன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் வீடியோவில், “பிரதமர் நரேந்திர மோடி அவர்களே….
எங்களின் கூட்டணியைப் பார்த்து பயந்து தொடர்ந்து எங்களைத் தாக்கிவருகிறீர்கள். எங்களை நீங்கள் எதிர்க்க வேண்டும் என்பதுதான் எங்களின் தேவை. எனவே, நாங்கள் விரும்பக்கூடிய இடத்தில்தான் நீங்கள் நிற்கிறீர்கள். இதற்குப் பிறகும் நீங்கள் எதிர்மறையாகவே இருக்க வேண்டும். அதன் மூலம் `இந்தியா‘ (எங்களின் கூட்டணியை) மக்களிடம் கொண்டுபோய் சேர்ப்போம்” எனத் தெரிவித்திருக்கிறார்.