நேர்த்திக்கடன்:
அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் தினமும் வெளிநாடுகளிலிருந்தும், வெளி மாநிலங்களிலிருந்தும் பல்வேறு முருக பக்தர்கள் முருகனைத் தரிசிப்பதற்காக வருகிறார்கள். அவர்கள் மொட்டை அடித்தும், அலகு குத்தியும், காவடி எடுத்தும், தங்கள் வயலில் விளைந்த நெல், மக்காச்சோளம், கம்பு, சேவல், கோழி எனப் பக்தர்கள் தங்களின் நேர்த்திக்கடனை, பழநியம்பதி முருகப் பெருமானுக்குக் காணிக்கையாகச் செலுத்தி வருகின்றனர்.
சேவல், கோழிகள் ஏலம்:
முருகனின் அம்சமான சேவல், கோழிகளைப் பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனாகச் செலுத்தும் நிலையில், கோயில் நிர்வாகமே தினந்தோறும் பக்தர்கள் செலுத்தும் சேவல், கோழிகளை மாலை 7 மணிக்கு மலைக்கோயில் மேலே வெளிப்பிரகாரத்தில் வைத்து ஏலம் விட்டு வந்தது.
இந்நிலையில் மலைக் கோயிலுக்கு மேலே சென்று பொதுமக்கள் வாங்குவதில் பெரிய அளவில் ஆர்வம் காட்டாததால், மாலை மின் இழுவை ரயில் எதிரே வைத்து சேவல், கோழிகளை ஏலம் விட்டு வருகிறார்கள்.
பொதுவாக, பிராய்லர் கோழிக் கடையில் கிலோ 100 முதல் 150 ரூபாய்க்கு கோழி கிடைக்கிறது. அதேபோல் நாட்டுக்கோழி கிலோ 400 ரூபாய்க்கும், பண்ணை கோழி 170 ரூபாய்க்கும் , கட்டு சேவல் 450 ரூபாய்க்கும் கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் கோயில் நிர்வாகத்தில் விடப்படும் ஏலத்தில் பக்தர்களால் காணிக்கையாகச் செலுத்தப்படும் சேவல், கோழிகளைக் குறைந்த விலையில் விற்கப்படாமல் அனைத்து விதமான கோழிகளுக்கும் (அடிப்படை விலை) 500 ரூபாய் வீதம் விற்பனை செய்யப்படுவதாகவும், இதற்கு மேல் நாங்கள் எப்படி ஏலம் கேட்பது என்றும், இவ்வளவு தொகையைக் கோயில் நிர்வாகமே விலை வைத்து ஏலம் விட்டால் பொதுமக்கள் நாங்கள் எப்படி ஏலம் எடுப்பது என்றும் சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.