Bangalore
oi-Nantha Kumar R
பெங்களூர்: தமிழக பாஜக மேலிட பொறுப்பாளராக செயல்பட்டு வரும் சிடி ரவிக்கு கர்நாடகா மாநில பாஜக தலைவராக நியமனம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் இதன் பின்னணியில் பாஜக போடும் கணக்கு பற்றிய முக்கிய தகவல்களும் வெளியாகி உள்ளன.
கர்நாடகாவில் கடந்த மே மாதம் சட்டசபை தேர்தல் நடந்து முடிந்தது. மொத்தம் 224 சட்டசபை தொகுதிகள் உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களில் வென்று தனித்து ஆட்சியை பிடித்தது. மாறாக பாஜக வெறும் 66 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று ஆட்சியை பறிகொடுத்தது. இந்த தேர்தலில் ஜேடிஎஸ் கட்சி 19 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது.
மாநிலத்தில் தொங்கு சட்டசபை உருவாகும். அப்படி நடந்தால் ஜேடிஎஸ் உதவியுடன் பாஜக ஆட்சியை பிடிக்கும் என கூறப்பட்டது. ஆனால் காங்கிரஸ் தனி மெஜாரிட்டியுடன் ஆட்சியை கைப்பற்றியது. இன்னும் 10 மாதத்துக்குள் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பாஜகவின் இந்த தேர்தல் தோல்வி கர்நாடகாவில் பின்னடைவை ஏற்படுத்தலாம் என கூறப்படுகிறது.
இந்த பிரச்சனையை சரிசெய்ய வேண்டிய பொறுப்பு பாஜக மேலிடத்துக்கு உள்ளது. இந்நிலையில் தான் கர்நாடகா பாஜகவில் முக்கிய மாற்றம் மேற்கொள்ள கட்சி மேலிடம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி கர்நாடகா மாநில பாஜக தலைவராக உள்ள நளின் குமார் கட்டீலுக்கு பதில் சிடி ரவியை நியமனம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதற்கு முக்கிய காரணமா சில விஷயங்கள் சொல்லப்படுகின்றன. அதாவது கர்நாடகாவில் உள்ள சிக்கமகளூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சிடி ரவி. இவர் கடந்த 2004 முதல் 2018 வரை நடந்த 4 சட்டசபை தேர்தல்களில் சிக்கமகளூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கடந்த மே மாதம் நடந்த தேர்தலில் அவர் தோல்வியடைந்தார். முன்னதாக கர்நாடகா பாஜக ஆட்சியில் எடியூரப்பா அமைச்சரவையில் சுற்றுலாத்துறை அமைச்சராகவும் செயல்பட்டுள்ளார்.
இது லிஸ்ட்லயே இல்லையே.. தேர்தலில் பிரியங்கா காந்தி களமிறங்கப்போகும் தொகுதிகள்.. 2 ரெடி!
தற்போது பாஜகவின் தேசிய பொதுச்செயலாளராக செயல்பட்டு வரும் சிடி ரவி தமிழ்நாடு, மகாராஷ்டிரா மேலிட பொறுப்பாளராகவும் செயல்பட்டு வருகிறார். 56 வயது நிரம்பிய சிடி ரவி ஒக்கலிகர் சமுதாயத்தை சேர்ந்தவர். இவர் இந்துத்துவாக கொள்கை மீது தீவிர பற்று கொண்டுள்ளதோடு, காங்கிரஸ் கட்சியை தடாலடியாக விமர்சனம் செய்யும் பண்பையும் கொண்டுள்ளார். அரசியலில் இளம்வயதாக இருப்பதால் அவரால் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய முடியும் என பாஜக மேலிடம் நினைக்கிறது.
அதோடு கர்நாடகாவில் ஓல்டு மைசூர் மாவட்டங்களில் ஒக்கலிகர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் அதிகம் உள்ளனர். இவர்கள் முன்னாள் முதல்வர் குமாரசாமியின் ஜேடிஎஸ் கட்சிக்கு தான் ஓட்டளித்து வந்தனர். ஆனால் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அவர்கள் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்தனர். இதற்கு முக்கிய காரணம் கர்நாடகா காங்கிரஸ் தலைவராக ஒக்கலிகர் சமுதாயத்தை சேர்ந்த டிகே சிவக்குமார் இருந்தது தான். தற்போது சிடி ரவிக்கு மாநில தலைவர் பதவி வழங்கும் பட்சத்தில் ஒக்கலிகர் சமுதாயத்தினரின் ஓட்டுகளை கவர முடியும் என பாஜக நம்புகிறது.
மேலும் தற்போது கர்நாடகா பாஜகவில் செல்வாக்கு மிக்க தலைவராக உள்ள எடியூரப்பா தேர்தல் அரசியலில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மையும் மூட்டு வலி பிரச்சனையில் உள்ளார். இதனால் அடுத்தக்கட்ட துடிப்பான தலைவர்களை உருவாக்க வேண்டியது அவசியம் என பாஜக நினைக்கிறது. பொதுவாக லிங்காயத் சமுதாயத்தினரின் ஓட்டுகள் பாஜகவின் பக்கம் உள்ளது. அதேபோல் பிராமின் உள்பட உயர்வகுப்பை சேர்ந்த மக்களின் ஓட்டுக்களும் பெரும்பாலும் பாஜக தான் அறுவடை செய்கிறது.
இத்தகைய சூழலில் காங்கிரஸ், ஜேடிஎஸ் கட்சியின் ஓட்டு வங்கியாக உள்ள ஒக்கலிகர் ஓட்டுகளை பாஜக தன்வசப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. ஒக்கலிகர் ஓட்டுக்களை கவரும் வகையில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பாஜக பல முயற்சிகளை எடுத்தது. இருப்பினும் அந்த முயற்சிகள் பாஜகவுக்கு பெரிய அளவில் கைக்கொடுக்கவில்லை. இத்தகைய சூழலில் தான் சிடி ரவிக்கு கர்நாடகா மாநில தலைவர் பதவி வழங்க பாஜக மேலிடம் திட்டமிட்டு ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.
English summary
There are some reports says that CT Ravi, who is acting as the in-charge of the Tamil Nadu BJP, is going to be appointed as the Karnataka state BJP president. And in the background of this, important information about the account of BJP has also been revealed.
Story first published: Wednesday, July 26, 2023, 20:27 [IST]