Chennai
oi-Mani Singh S
சென்னை: ரயில்களில் பொது வகுப்பு பெட்டிகளில் பயணிக்கும் பயணிகளின் வசதிக்காக மலிவு விலையில் உணவுகளை வழங்கும் திட்டத்தை ரயில்வே அறிமுகம் செய்ய உள்ளது. இந்த திட்டம் பற்றிய விவரங்களையும் அது எப்படி செயல்படுத்தப்படுகிறது என்பதையும் பார்க்கலாம்.
இந்தியாவில் பயணிகள் அதிகம் தங்கள் போக்குவரத்து தேவைக்கு பயன்படுத்தும் பொது போக்குவரத்து சேவை எது என்றால் தயங்காமல் ரயில் என்று சொல்லிவிடலாம். அதிலும் தொலை தூர பயணங்கள் என்றால் முதலில் ரயிலில் டிக்கெட் இருக்கிறதா என்று பார்த்து விட்டுதான் மாற்று வழி பற்றி யோசிப்போம். அந்த அளவுக்கு இந்தியாவில் பயணிகளுடன் இரண்டறக் கலந்தது ரயில் என்று சொன்னால் மிகையல்ல.
இதற்கு முக்கிய காரணம் மலிவான கட்டணத்திலே பாதுகாப்பான பயணம் என்பதோடு கழிவறை வசதியும் இருப்பதால் எந்த ஒரு அசவுகர்யமும் இன்றி பயணிகள் செல்ல முடியும். குறிப்பாக குழந்தைகள், முதியவர்களுடன் செல்லும் பயணிகள் கண்டிப்பாக ரயில் பயணத்தை தான் நாடுவார்கள். இப்படி ரயில்களின் சிறப்புகளை பற்றி சொல்லிக் கொண்டே போகலாம்.
அசத்தலான திட்டம்: தற்போது ரயில் பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு பல்வேறு வசதிகளை ரயில்வே நிர்வாகம் மேம்படுத்தி வருகிறது. ரயில் பயணங்களின் சவுகர்யமான பயணத்திற்கு வந்தே பாரத் உள்ளிட்ட ரயில்களை அறிமுகப்படுத்துவதாக இருக்கட்டும்.. பண்டிகை காலங்களில் சிறப்பு ரயில்கள் இயக்குவதாகட்டும் என அவ்வப்போது பயணிகளுக்கு சிறப்பான வசதியை அளிக்க ரயில்வே முயற்சித்து வருகிறது.
அந்த வகையில், அசத்தலான திட்டம் ஒன்றை ரயில்வே சோதனை அடிப்படையில் மேற்கொள்ள உள்ளது. அதாவது, தொலை தூர ரயில்களில் பயணிக்கும் பயணிகள், மாலை வேளையிலேயே ரயிலில் ஏறிவிட்டால் மறுநாள் காலையில் தான் தங்கள் ஊருக்கு செல்ல முடியும். இதனால், பெரும்பாலான பயணிகள் இரவு உணவை பார்சல்கள் வாங்கி வந்தோ.. வீட்டில் இருந்தே தயார் செய்து கொண்டு வந்தோதான் சாப்பிடுவதை காண முடியும்.
20 ரூபாய்க்கு உணவு: சில பயணிகள் ரயில் நிலைய பிளாட்பார்ம்களில் கொண்டு வரப்படும் உணவுகளை வாங்கி சாப்பிடுவார்கள். இத்தகைய உணவுகள் விலை அதிகமாக இருப்பதோடு தரமற்று இருப்பதாகவும் புகார் எழுவதுண்டு. குறிப்பாக ரயிலில் முன் பதிவு செய்யப்படாத பொது பெட்டிகளில் பயணிப்பவர்கள் சாமானிய மக்களாகத்தான் இருப்பார்கள்.
இவர்களின் வசதிக்காக 20 ரூபாயில் உணவு விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது. இது குறித்து ரயில்வே வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ரயில் நிலையத்தில் பொதுப்பெட்டிகள் நிற்கும் இடத்தில் நடைமேடையில் கவுண்டர்கள் அமைக்கப்படும். இதில் ரூ. 20 ரூபாய்க்கு மீல்ஸ் கிடைக்கும்.
என்னென்ன உணவுகள்?: 20 ரூபாய்க்கு வழங்கப்படும் உணவு மெனுவில் ஆலு பூரி, சாதம், பாவ்-பாஜி, மசாலா தோசை, கிச்சடி, சோலே குல்சே/பத்தூரே போன்ற உணவு வகைகள் விற்பனை செய்யப்படும். மேலும், மலிவு விலையில் குடிநீரை வழங்கவும் ரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது. ஐஆர்.சிடி.சியின் கிட்சன் யூனிட்களில் இருந்து உணவு தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு கொண்டு வரப்படும்.
சோதனை அடிப்படையில் ஆறு மாதங்களுக்கு இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்று ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே இது 51 ரயில் நிலையங்களில் பயன்பாட்டில் இருப்பதாகவும் மேலும் 13 ரயில் நிலையங்களில் கொண்டு வரப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English summary
Railways is going to introduce a scheme to provide affordable meals for the convenience of passengers traveling in general class coaches in trains. Let’s see details about this scheme and how it is implemented.
Story first published: Friday, July 21, 2023, 21:34 [IST]