`பாஜக வாஷிங் மெஷின்தான்… எங்களிடம் வந்தால் தூய்மையாக்குவோம்!' – சொல்கிறார் வானதி சீனிவாசன்

Untitled 5.jpg

கோவை சுந்தராபுரம் பகுதியில் பா.ஜ.க தேசிய மகளிரணித் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “கர்நாடகாவுக்குச் சென்றிருக்கும் முதல்வர் ஸ்டாலின் மேக்கேதாட்டூ அணை கட்டும் கர்நாடகா அரசின் முயற்சிக்கு இதுவரை எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. பிரதமர் மோடி எதிர்ப்பை மட்டும் கவனத்தில் கொண்டு, சுயநல அரசியலுக்காக விவசாயிகள் நலனை, மாநிலத்தை உரிமையை முதல்வர் காவு கொடுக்கிறார்.

வானதி சீனிவாசன்

காவிரி நதி நீர் பிரச்னை உயிர் நாடிப் பிரச்னையாக இருக்கிறது. இதில் தமிழக உரிமையைப் பாதுகாக்கும் வகையில் மத்திய அரசு நடுநிலை வகித்த காரணத்தினால்தான், காவிரி நதிநீர் மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டது.

மேக்கேதாட்டூ அணை கட்ட வேண்டுமென கர்நாடகா பா.ஜ.க அரசு சொன்னபோதுகூட, நடுவர் நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்த வேண்டுமென மத்திய பா.ஜ.க அரசு, தமிழக விவசாயிகள் நியாயத்தின் பக்கம் நின்றது. தி.மு.க அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுகள் எந்த காலத்தில் நடந்தது… நீதிமன்ற உத்தரவினால் துறைகள் நடவடிக்கை எடுத்தால் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்பதா… இதுதான் சட்டத்துக்கு கொடுக்கும் மரியாதையா… விளையாட்டுத்துறை அமைச்சர் விளையாட்டுத்தனமாகப் பேசுகிறார். நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில்தான் சோதனைகள் மற்றும் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

மேக்கேதாட்டூ

பா.ஜ.க-வை வாஷிங் மெஷின் என்றார்கள். இப்போது பா.ஜ.க-வை கங்கை நதி என்கிறார்கள். கங்கை நதி புனிதம் என்பதை ஏற்றுக்கொண்டதில் சந்தோசமடைகிறேன். அவர்களுக்கு எதுவும் புனிதம் கிடையாது. பா.ஜ.க-வை வாஷிங் மெஷின் என்றால், வாஷிங் மெஷின்தான். எங்களிடம் வந்தால் அவர்களைத் தூய்மையாக மாற்றிவிடுவோம். கங்கை நதி என்றால், கங்கை நதிதான். எங்களிடம் வந்ததால் எல்லாவற்றையும் புனிதமாக மாற்றும் சக்தி எங்களிடம் உள்ளது.

தேர்தல் கூட்டணி குறித்து தேசிய தலைமைதான் முடிவு எடுக்கும். தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகள் கூட்டம் புதிதாக நடக்கவில்லை. வழக்கமாக நடக்கும் ஒன்றுதான். பா.ம.க கூட்டணியில் இருக்கிறார்களா என்பது அந்தக் கூட்டத்தில் தெரியும். எதிர்க்கட்சி எம்.எல்.ஏ-விடம் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டுமென மக்கள் நீதி மய்யத்தினர் கேட்கின்றனர். சட்டமன்ற உறுப்பினராக என்னென்ன செய்ய வேண்டுமோ, அத்தனையும் செய்து கொண்டிருக்கிறேன். நான் களத்தில் நின்று வேலை செய்து கொண்டிருக்கிறேன்.

கமல்ஹாசன்

ஆனால் கமல்ஹாசன் நான்கைந்து முறைகூட கோவைக்கு வரவில்லை. மக்கள் நீதி மய்யத்துக்கு அரசியல் வாழ்க்கை தேவை என்பதால், கோவை தெற்கு தொகுதிதான் கண்ணில் தெரிகிறது. கமல்ஹாசன் ஒரு பொண்ணுக்கு கார் வாங்கித் தந்தார். அதை கோவைக்கு வந்து கொடுக்கக்கூட அவருக்கு நேரமில்லை. நான் 1,000 பெண்களுக்குத் தையல் இயந்திரம் வாங்கித் தந்து தொழில் முனைவோராக மாற்றியிருக்கிறேன்” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *