தமிழ்நாட்டின் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்குச் சொந்தமான இடங்கள், அவரின் மகன் கௌதம சிகாமணியின் வீடு உள்ளிட்ட 7 இடங்களில் நேற்றைய தினம் அமலாக்கத்துறை அதிகாரிகள் சுமார் 17 மணிநேரம் சோதனை நடத்தினர். அதைத் தொடர்ந்து அவரிடம் விசாரணையும் நடத்தினர். இந்த நிலையில், அமலாக்கத்துறை தன்னுடைய அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் அமைச்சர் பொன்முடியின் இல்லத்தில் நடத்தப்பட்ட சோதனை குறித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறது.
அந்த அறிக்கையில், “தமிழ்நாட்டின் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தொடர்பான 7 இடங்களில் நேற்று சோதனை நடத்தப்பட்டது. சோதனையின்போது ரூ 81.7 லட்சம் மதிப்புள்ள ஆவணங்கள், ரூ.13 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு பணம் மற்றும் பல ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன. மேலும், வங்கி வைப்புத்தொகையான ரூ.41.9 கோடியும் முடக்கப்பட்டிருக்கிறது” எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.