கட்சி நிர்வாகிகள் வாக்குவாதம்!
விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடி வீட்டில் ED ரெய்டு நடைபெற்று வரும் நிலையில், அமைச்சர் பொன்முடி வீட்டின் அருகே உள்ள சிமென்ட் சாலையில் போலீஸார் தடுப்புகளை அமைத்து காவல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது அங்குவந்த ஒருசில கட்சி நிர்வாகிகள், தங்களை உள்ளே விடுங்கள் என போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பொன்முடி வீட்டில் CRPF போலீஸாரே பாதுகாப்பு பணியில் உள்ளனர். தமிழக போலீஸார் யாரும் வீட்டின் கேட்டை தாண்டி உள்ளே அனுமதிக்கப்படவில்லை.
`அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு’
தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் திடீர் சோதனை மேற்கொண்டிருக்கின்றனர். ஏற்கெனவே, தி.மு.க அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் கடந்த ஜூன் மாதம் 13-ம் தேதி திடீர் சோதனை மேற்கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் அன்றிரவே அவரைக் கைதுசெய்தனர்.
முன்னதாக 1996 – 2001 காலகட்டத்தில் பொன்முடி போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தபோது நில அபகரிப்பு மோசடியில் ஈடுபட்டதாகத் தொடரப்பட்ட வழக்கிலிருந்து இந்த மாத தொடக்கத்தில் தான் விடுவிக்கப்பட்டார். இது நடந்து 10 நாள்களே ஆகியிருக்கும் நிலையில் தற்போது திடீரென அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று பொன்முடி வீட்டில் சோதனை மேற்கொண்டிருக்கின்றனர்.
சென்னை சைதாப்பேட்டையில் ஸ்ரீநகர் காலனி மற்றும் விழுப்புரத்தில் உள்ள பொன்முடியின் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்றுகாலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும், பொன்முடியின் மகனும், நாடாளுமன்ற உறுப்பினருமான கௌதம சிகாமணி வீட்டிலும் இந்த சோதனை நடைபெற்றுவருவதாகக் கூறப்படுகிறது.
பெங்களூருவில் எதிர்க்கட்சிகளின் கூட்டம் இன்று நடைபெற உள்ள நிலையில், அமலாக்கத்துறையின் இந்த ரெய்டு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.