Villupuram
oi-Noorul Ahamed Jahaber Ali
விழுப்புரம்: அமைச்சர் பொன்முடியின் விழுப்புரம் இல்லத்தில் 15 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்று வந்த சோதனை தற்போது நிறைவடைந்து இருக்கிறது.
கடந்த ஜூன் மாதம் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு, தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அலுவலகம், உறவினர்கள், நண்பர்களின் இல்லம், அலுவலகங்களில் அமலாக்கத்துறை தீவிர சோதனை நடத்தியது. சோதனை நிறைவடைந்த நாளில் நள்ளிரவே அமலாக்கத்துறை அதிகாரிகள் செந்தில் பாலாஜியை கைது செய்தனர்.
இந்த நிலையில் தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மீது கடந்த 2011 ஆம் ஆண்டு, செம்மண் குவாரி ஒதுக்கீட்டில் முறைகேடு செய்து அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக இன்று காலை அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையை தொடங்கின.
பொன்முடி மற்றும் அவரது மகனும் கள்ளக்குறிச்சி திமுக எம்.பியுமான கௌதம் சிகாமணி, அவரது இளைய மகனும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவருமான மருத்துவ அசோக் சிகாமணி ஆகியோருக்கு தொடர்புடைய இடங்களில் இன்று காலை 7 மணி முதலே அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டார்கள்.
விழுப்புரத்தில் உள்ள அமைச்சர் பொன்முடி வீடு, சென்னை சைதாபேட்டையில் அவரது வீடு, அவரது மகனும் திமுக எம்பியுமான கௌதம் சிகாமணி அலுவலகம், பொன்முடிக்கு சொந்தமான கல்லூரி, அசோக் சிகாமணிக்கு சொந்தமான மருத்துவமனை உட்பட அவருக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
சென்னையில் உள்ள வீட்டில் அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி, அவரது மகன் அசோக் சிகாமணி ஆகியோர் இருந்துள்ளனர். அவர்களிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் வீட்டில் வைத்தே தீவிர விசாரணை மேற்கொண்டார்கள். அதேபோல் வங்கி அதிகாரிகளும் பொன்முடி வீட்டுக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர்.
இந்த சோதனையில் ரூ.70 லட்சம் ரொக்கம், 10 லட்சம் மதிப்புள்ள அமெரிக்க டாலர், முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகின. இதனை அடுத்து அமைச்சர் பொன்முடியை விசாரணைக்காக சாஸ்திரி பவனில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர்.
அங்கு அவரிடம் சுமார் 2 மணி நேரத்தும் மேலாக தீவிர விசாரணை நடத்தினர். இதற்கிடையே விழுப்புரம் சண்முகபுரம் காலணியில் உள்ள அமைச்சர் பொன்முடியின் வீட்டில் நடைபெற்று வரும் சோதனை 15 மணி நேரம் கழித்து முடிவுக்கு வந்து இருக்கிறது. அதே நேரம் விழுப்புரத்தில் பொன்முடிக்கு சொந்தமான கல்வி நிறுவனங்களில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை தொடர்ந்து வருகிறது.
பொன்முடி வீட்டில் தொடரும் ரெய்டு.! வந்து விழுந்த கேள்வி.. அமைச்சர் மனோ தங்கராஜ் சொன்ன பதிலை பாருங்க
English summary
The search at Minister Ponmudi’s Villupuram residence, which lasted for more than 15 hours, has now been completed.