Chennai
oi-Vignesh Selvaraj
சென்னை: செந்தில் பாலாஜி ஆட்கொணர்வு மனு இறுதிக்கட்ட விசாரணையின்போது மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், தன்னால் முடியவில்லை, நேற்றுதான் மருத்துவ சிகிச்சைக்கு சென்று வந்தேன் எனச் சொல்ல, பரவாயில்லை, கொஞ்சம் பிரேக் எடுத்துக்கோங்க.. நான் என்ன ஸ்கூலா நடத்துறேன் எனக் கூறி ஓய்வு எடுக்கச் சொன்னார் நீதிபதி சிவி கார்த்திகேயன்.
சட்டவிரோத பண பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஜூன் 14ஆம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அதிகாரிகளால் சட்ட விரோதமாக கைது செய்யப்பட்டு உள்ளதாகவும், அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் அவரது மனைவி மேகலா சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனுதாக்கல் செய்தார். இந்த வழக்கை நீதிபதிகள் ஜெ.நிஷாபானு, டி.பரத சக்கரவர்த்தி ஆகியோர் மாறுபட்ட தீர்ப்புகளை அளித்தனர்.
கபில் சிபல்: இதையடுத்து 3வது நீதிபதி சி.வி கார்த்திகேயன் இந்த வழக்கை விசாரித்து வந்தார். செந்தில் பாலாஜி மனைவி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வாதாடுவதற்காகவே, வழக்கு விசாரணையை தள்ளி வைக்கக் கோரினார். அதன்படியே வழக்கு தள்ளி வைக்கப்பட்டு, செந்தில் பாலாஜி தரப்புக்கு ஆதரவாக கபில் சிபல் ஆஜராகி வாதங்களை முன்வைத்தார்.
அதைத்தொடர்ந்து, அடுத்த நாள், அமலாக்கத்துறை தரப்பில் துஷார் மேத்தா ஆஜராகி வாதங்களை வைத்தார். இதையடுத்து பதில் வாதம் விசாரணை வியாழன் அன்று நடைபெற இருந்த நிலையில், கபில் சிபல் உடல் நல பிரச்சனை காரணமாக மருத்துவர் அப்பாயின்ட்மெண்ட் பெற்றிருந்தார். அதைச் சுட்டிக்காட்டியே விசாரணை நேற்றைக்கு தள்ளி வைக்கப்பட்டிருந்தது.
கைதுக்கு அப்புறம் ஆதாரம் திரட்ட நினைக்கக்கூடாது: அதன்படி, நேற்று மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜராகி, அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு எதிராக வாதங்களை அடுக்கினார். அமலாக்கத்துறை என்பது போலீஸ் கிடையாது. அவர்களுக்கு போலீசாருக்கான அதிகாரமும் கிடையாது. சட்டப்பிரிவு 50ன் கீழ் அமலாக்கத்துறை ஒருவர் மீது சந்தேகம் இருந்தால் அவரை விசாரிக்கலாம். அவருக்கு எதிராக புலன் விசாரணை செய்யலாம். அவருக்கு எதிரான ஆதாரங்களை திரட்டலாம். ஆனால், ஒருவரை கைது செய்துவிட்டு அதன்பின் ஆதாரங்களை திரட்ட நினைக்கக்கூடாது.
முழுமையாக ஆதாரங்கள் இருந்தால் மட்டுமே, ஒருவர் குற்றம் செய்தவராக கருதப்பட்டால் மட்டுமே அவரை அமலாக்கத்துறையால் கைது செய்ய முடியும். ஏனென்றால் இவர்கள் போலீஸ் கிடையாது. போலீஸ் ஒருவரை கைது செய்து, சந்தேகத்தின் பெயரில் அவரை விசாரிக்கலாம். ஆனால் அமலாக்கத்துறை அப்படி செய்ய முடியாது. கைது செய்த பின் ஒருவரை புலன் விசாரணை முடியாது. இதை நான் சொல்லவில்லை. உச்ச நீதிமன்றம் சொல்கிறது என வாதிட்டார்.
வலி இருக்கு, முடியல: அமலாக்கத்துறை சட்டங்கள், ஃபெரா சட்டம், உச்ச நீதிமன்றம் அளித்த முந்தைய தீர்ப்புகளில் உள்ள நுணுக்கங்களை முன்வைத்து காலை முதல் கடுமையாக வாதங்களை எடுத்து வைத்த கபில் சிபல், ஒரு கட்டத்தில் மிகுந்த அயர்ச்சியடைந்தார். தான் நேற்றுத்தான் மருத்துவ சிகிச்சைக்கு சென்று வந்திருப்பதாகவும், இப்போது வலி இருப்பதாகவும் தெரிவித்தார்.
ரெஸ்ட் எடுங்க ப்ளீஸ்: இதையடுத்து நீதிபதி சிவி கார்த்திகேயன், தயவு செய்து கொஞ்சம் பிரேக் எடுத்துக்கொள்ளுங்கள். நான் ஒன்றும் பள்ளியோ, கல்லூரியோ நடத்தவில்லை. ஓய்வு எடுத்துவிட்டு 12.15 மணியளவில் வாருங்கள் என அறிவுறுத்தி ஓய்வெடுக்க அனுப்பி வைத்தார். பின்னர் சிறிது நேர ஓய்வுக்குப் பிறகு கபில் சிபல் வந்ததும் வாதங்கள் தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது.
பாதிக்கப்பட்டவர் செந்தில் பாலாஜி அல்ல.. யாரும் தொடாத விஷயத்தை பிடித்த நீதிபதி! ஷாக் ஆன வழக்கறிஞர்கள்
பின்னர், தொடர்ந்து வாதாடிய கபில் சிபல், உங்கள் முன்பாக ஆஜராகி வாதாடியது மகிழ்ச்சி என நீதிபதியைப் பார்த்து தெரிவித்தார். அதற்கு நீதிபதி சிவி கார்த்திகேயனும், எனக்கும் மகிழ்ச்சி என சிரித்தபடி தெரிவித்தார். பின்னர் தான், மதிய உணவுக்குக் கூட செல்லாமல் தனது நீண்ட தீர்ப்பை வாசிக்கத் தொடங்கினார் சி.வி.கார்த்திகேயன். செந்தில் பாலாஜி கைது சட்டப்படியானது; நீதிமன்ற காவல் சட்டப்படியானது. ஆட்கொணர்வு மனு ஏற்கத்தக்கதல்ல என அதிரடியாக தீர்ப்பளித்தார் நீதிபதி.
English summary
While argument in Senthil balaji case, Kapil Sibal says I’m sorry my lord I’m having a little pain. Justice Karthikeyan replied, Please take a break. I’m not running a school or college here.