Tirupati
oi-Jeyalakshmi C
திருப்பதி: மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, தனது குடும்பத்துடன் எழுமலையான் கோவிலுக்கு வந்து வழிபாடு நடத்தினார். தரிசனத்துக்கு பின்னர் வேத பண்டிதர்கள் வேத ஆசிர்வாதம் வழங்க, கோயில் நிர்வாகிகள் மத்திய அமைச்சருக்கு பட்டு வஸ்திரம் அணிவித்தனர். அதன் பின்னர் சுவாமியின் தீர்த்த பிரசாதம் வழங்கி கௌரவித்தனர்.
ஆந்திர மாநிலத்தின் முக்கிய வழிபாட்டு தலங்களில் ஒன்று திருப்பதி திருமலை ஏழுமலையான் கோவில். உலக அளவில் பணக்கார கோவில்களில் ஒன்றாக உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். இந்த கோவிலுக்கு ஆந்திரா தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்கள் மட்டுமின்றி தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். நாள் ஒன்றுக்கு கிட்டத்தட்ட ஒரு லட்சம் பக்தர்கள் வரை சாமி தரிசனம் செய்கின்றனர்.
சாதாரண ஏழைமக்கள் நாள் கணக்கில் காத்திருந்து ஏழுமலையானை தரிசனம் செய்கின்றனர். அதே நேரத்தில் விஐபிக்கள் அதற்கென உரிய தரிசன நேரத்தில் ஏழுமலையானை சிறப்பு தரிசன முறையில் வழிபடுகின்றனர். திருப்பதிக்கு வருபவர்கள் சுற்றியுள்ள கோவில்களுக்கும் சென்று வருவது வழக்கம். திருப்பதி திருமலை மட்டுமின்றி திருப்பதி மாவட்டத்தில் ஏராளமான கோவில்களும் உள்ளன. திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில், திருப்பதி கோவிந்தராஜ சுவாவி கோவில், சீனிவாச மங்காபுரம் கல்யாண வெங்கடேசுவர கோவில், அப்பலயகுண்டம் பிரசன்ன வெங்கடேஸ்வரர் கோவில் உள்ளிட்ட பல கோவில்கள் உள்ளன. இதேபோல் ஆகாச கங்கா, தலகோனா நீர்வீழ்ச்சி உள்ளிட்ட பல சுற்றுலா தலங்கள் உள்ளன.
இதேபோல் காளஹஸ்தியில் உள்ள சிவன் கோயிலுக்கும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். திருப்பதிக்கு வரும் பக்தர்களில் பெரும்பாலான பக்தர்கள் காளஹஸ்திக்கும் சென்றுவிட்டுதான் வருவார்கள். ஆனால் இங்கு சாலை வசதி சரியான முறையில் இல்லை என பல ஆண்டுகளாக பக்தர்கள் குமுறி வருகின்றனர். இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவில் மற்றும் காளஹஸ்தி கோவில் போன்ற வழிபாட்டு தலங்களுக்கு செல்லும் பக்தர்களின் பாதுகாப்பையும் வசதியையும் மேம்படுத்தும் வகையில் தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்படுகின்றன.
சுமார் 2900 கோடி ரூபாய் செலவில் திருப்பதியில் 3 தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்படுகின்றன. மொத்த நீளம் 87 கிலோமீட்டர் தொலைவில் இந்த சாலைகள் அமைக்கப்படுகின்றன. NH-71ஆக நாயுடுபேட்- துர்பு கனுபூர் பிரிவு முதல் பணியாக தொடங்கப்படுகிறது. இந்த தேசிய நெடுஞ்சாலை 35 கிலோ மீட்டர் தொலைவுக்கு அமைக்கப்படுகிறது. இந்த சாலை 1399 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படுகிறது.
இரண்டாவது திட்டம் NH-516W துர்பு கனுபூர் வழியாக சிலக்குரு குறுக்கு-கிருஷ்ணாப்பட்டினம் துறைமுக தெற்கு கேட் பிரிவில் அமைக்கப்படுகிறது. 36 கிலோ மீட்டர் தூரம் கொண்ட இந்த சாலை, 909 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்படுகிறது. மூன்றாவது, தம்மினாப்பட்டினம்-நரிகெல்லபள்ளே சாலை. இது NH-516W மற்றும் NH-67 இல் இபூருலிருந்து கிருஷ்ணாப்பட்டினம் துறைமுகம் வரை அர்ப்பணிக்கப்பட்ட துறைமுக சாலையின் விரிவாக்கத்தை உள்ளடக்கியது. இதன் நீளம் 16 கிமீ மற்றும் திட்டத்தின் மதிப்பு 610 கோடி ரூபாய் ஆகும்.
இந்த மூன்று நெடுஞ்சாலைகளுக்கும் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி நேற்று அடிக்கல் நாட்டினார். இந்த நெடுஞ்சாலைகள் கிருஷ்ணாப்பட்டினம் துறைமுகத்திற்கு தடையற்ற மற்றும் பாதுகாப்பான இணைப்பு சாலைகளாக இருக்கும். மேலும் நெல்லூரில் உள்ள SEZ தொழில்துறை முனைகளை விரைவாக சென்றடையவும் இந்த நெடுஞ்சாலைகள் உதவியாக இருக்கும். மேலும் திருப்பதி ஏழுமலையான் கோவில் மற்றும் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் ஆகிய தலங்களுக்கு செல்லும் பக்தர்களுக்கும் இந்த சாலை வசதியானதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நெடுஞ்சாலைகள் மூலம் திருப்பதி மற்றும் காளஹஸ்தி கோவிலுக்கு செல்லும் பயண நேரம் மிச்சமாகும் என்றும் கூறப்படுகிறது.
திறமையும் திட்டமும் ஒன்றாக இணைந்தால், உலகிற்கே வழிகாட்டலாம்! யோகி ஆதித்யநாத் நம்பிக்கை
இந்த திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுவதற்கு முன்னதாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தனது குடும்பத்தினருடன் திருப்பதி ஏழுமலையான் கோயிலிலுக்கு இன்று காலை வந்தார். கோயிலுக்கு வந்த அவர்களுக்கு தேவஸ்தான அதிகாரிகள் சிறப்பான முறையில் வரவேற்று மரியாதை செய்தனர். நிதின் கட்கரியும் அவரது குடும்பத்தினரும் சுவாமியின் தோமாலை சேவையில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். தரிசனத்துக்கு பின்னர் வேத பண்டிதர்கள் வேத ஆசிர்வாதம் வழங்க, கோயில் நிர்வாகிகள் மத்திய அமைச்சருக்கு பட்டு வஸ்திரம் அணிவித்தனர். அதன் பின்னர் சுவாமியின் தீர்த்த பிரசாதம் வழங்கி கௌரவித்தனர்.
English summary
Union Minister for Road Transport and National Highways Nitin Gadkari along with his family visited the Tirumala Balaji temple and offered prayers. After the darshan, the Vedic Pandits offered Vedic blessings and the temple administrators dressed the central minister in silk. After that they honored Swami by offering theertha prasadam.