சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சராக இருந்து வரும் செஞ்சி மஸ்தான், விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க செயலாளராகவும் இருந்து வருகிறார். திண்டிவனம், செஞ்சி மற்றும் மயிலம் சட்டமன்றத் தொகுதிகள் இவரது மாவட்ட எல்லைகளாக இருக்கின்றன. இம்முறை அமைச்சரான மஸ்தான் மீது, பல்வேறு எதிர்பார்ப்புகளை வைத்திருந்தனர் அந்த மாவட்ட உடன்பிறப்புகள். ஆனால், கடந்த உள்ளாட்சித் தேர்தலின்போது, மாற்றுக் கட்சியிலிருந்து புதியதாக தி.மு.க-வுக்கு வந்தவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்தது, தனது ஆதரவாளர்களுக்கே பொறுப்புகளை வழங்கியது உள்ளிட்ட காரணங்கள் மூத்த நிர்வாகிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தத் துவங்கின. இவை, மரக்காணம் ஒன்றிய உள்ளாட்சித் தேர்தல், திண்டிவனம் நகரமன்றத் தேர்தலின்போது உட்கட்சிப்பூசலாக எதிரொலித்தது.
இதனிடையே, கடந்த மாதம் திண்டிவனம் நகராட்சியின் நிர்வாக செயல்பாடுகளைக் கண்டித்து, நகரமன்ற கூட்டத்திலிருந்து 13 தி.மு.க அதிருப்தி கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்ததும், அவர்கள் கே.என்.நேருவைச் சந்தித்து புகார் வாசித்ததும் கட்சிக்குள் மேலும் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில்தான், கடந்த 24-ம் தேதி அமைச்சர் மஸ்தான் முன்னிலையில், திண்டிவனத்தில் உள்ள தனியார் மண்டபம் ஒன்றில், ‘திண்டிவனம் நகர தி.மு.க செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம்’ நடைபெற்றது. அப்போது, ‘பொறுத்தது போதும் பொங்கியெழு’ எனும் தொனியில், தங்களது ஆதகங்களை வெளிப்படையாக கொட்டி தீர்த்த கழக நிர்வாகிகள், “தி.மு.க என்ன உங்க கட்சியா?” என்றெல்லாம் மஸ்தானை நோக்கி கேள்விக் கணைகளை தொடுத்தனர். அமைச்சர்மீது கழக நிர்வாகிகளிடையே இருந்த அதிருப்தி, அந்த கூட்டத்தில் பலமாக வெடித்தது.