இதுதொடர்பாக கொங்கு பகுதியில் உள்ள மாவட்ட செயலாளர் ஒருவரிடம் பேசினோம். “அண்ணாமலை நடைபயணம் மேற்கொண்டு, அதனால் கூட்டணிக்கு பலம் சேர்த்தால் நல்லதுதான். ஆனால், அண்ணாமலை தனது சுயலாபத்துக்காக இந்த பயணத்தை மேற்கொள்கிறார். தேசிய ஜனநாயக கூட்டணியில் அ.தி.மு.க-வுக்கென தனி மதிப்பும் மரியாதையும் இருக்கிறது. ஆனால், தமிழக பா.ஜ.க தலைவராக இருக்கும் அண்ணாமலைக்கு அ.தி.மு.க-வின் பலம் இன்னும் புரியவில்லை. அதனால்தான், அ.தி.மு.க குறித்தும் எங்கள் தலைவர்கள் குறித்தும் தேவையில்லாததை பேசினார்.
ஆனால், ஜூலை 18-ம் தேதி டெல்லியில் நடந்த கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எடப்பாடிக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட தேசிய தலைவர்கள் அளித்த முக்கியத்துவத்தை பார்த்து அண்ணாமலையும், அவரின் ஆதரவாளர்களும் ஆடிப்போய் இருக்கிறார்கள். இந்நிலையில், அவரின் நடைபயணத்துக்கு எடப்பாடிக்கு அழைப்பு விடுத்து இருக்கிறார் அண்ணாமலை. இதுகுறித்து சேலம் நெடுஞ்சாலை நகரில் சமீபத்தில் சீனியர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார் எடப்பாடி. அதில் எடுக்கப்பட்ட முடிவின்படி, எடப்பாடி நடைபயண தொடங்கவிழாவில் பங்கேற்கவில்லை எனத் தெரிகிறது.
மாறாக, அ.தி.மு.க சார்பில் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி மற்றும் பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர். அதுவும் நிகழ்ச்சி நடைபெறும் ஜூலை 28-ம் தேதி, ராமநாதபுரத்தில் மதுரை மாநாடு குறித்த ஆலோசனை கூட்டம் இருக்கிறது. அதனால்தான், நடைபயண நிகழ்ச்சியில் அவர்கள் பங்கேற்கிறார்களே தவிர, விஷேச ஏற்பாடு எதுவுமில்லை. அதேபோல, சிவகங்கையில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கும் வேலுமணி, தங்கமணி உள்ளிட்டோரும் பங்கேற்க வாய்ப்பு இருக்கிறது.” என்றனர் விரிவாக…