மும்பையில் நேற்று மாலையில் இருந்தே விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இன்று காலையிலிருந்து மழை தொடர்ந்து பெய்துகொண்டே இருந்தது. கனமழை காரணமாக தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியதோடு, வாகனப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. அதோடு பலத்தக் காற்றுடன் மழை பெய்ததால் ஆங்காங்கே மரங்கள் ஒடிந்து விழுந்தது. சயான் கோலிவாடாவில் கார்கள் மீது மரம் ஒன்று ஒடிந்து விழுந்தன. மும்பை உட்பட முக்கிய இடங்களில் மீட்புப் பணிகளுக்காக தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர். கல்யான், டோம்பிவலி, உல்லாஸ்நகர், அம்பர்நாத் பகுதிகளில் இன்று முழுவதும் கனமழை பெய்தது. நவிமும்பை பேலாப்பூர் பஸ் டெப்போ முழுக்க மழை நீர் தேங்கியதால், பேருந்துகளை நிறுத்த முடியவில்லை.
தானேயில் தாழ்வான பகுதியில் தண்ணீர் தேங்கியதால் 250 குடும்பங்களும், பத்லாப்பூரில் 200 குடும்பங்களும் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர். தானே மாவட்டத்தில் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. மும்பை முழுக்க ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. ரயில் தண்டவாளத்தில் தண்ணீர் தேங்கியதால், தாக்குர்லி – கல்யான் இடையே புறநகர் ரயில் போக்குவரத்து தடைபட்டது.