அ.தி.மு.க-வின் முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க இலக்கிய அணி செயலாளருமாகிய வைகைச்செல்வன் நாமக்கல்லில் பிரசித்திபெற்ற ஆஞ்சநேயர் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். பிறகு, செய்தியாளர்களை சந்தித்த அவர், “தமிழ்நாடு உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் அதிரடியாக அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றனர். இதன் மூலமாக, மக்கள் விரோத அரசாங்கம் தி.மு.க என்பது வெட்ட வெளிச்சமாகிவிட்டது. லஞ்சம், லாவண்யம் இந்த ஆட்சியில் பெருகி விட்டது. எங்கு பார்த்தாலும், எந்த துறையிலும் லஞ்சம், லஞ்சம், லஞ்சம்தான்… மேலும், இந்த தி.மு.க அரசாங்கம் மக்களை வாட்டி வதைக்கின்றது.
ஒவ்வொரு அமைச்சரும் மக்கள் நலப்பணியில் தங்களை அர்ப்பணிக்காமல், தனக்கு என்ன கிடைக்கும், தன்னுடைய கட்சிக்கு என்ன கிடைக்கும், முதலமைச்சரின் குடும்பத்திற்கு என்னவெல்லாம் சொத்து சேர்க்கலாம், பணம் கொடுக்கலாம் என முழு கவனம் செலுத்துகின்றனர்.
இந்தக் காரணத்தால், கடந்த இரண்டு ஆண்டுகால தி.மு.க ஆட்சியில் மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை. அதோடு, சொத்து வரி, மின்சார கட்டணம் உயர்வு, கழிவு நீர் வரி உயர்வு. குடிநீர் வரி உயர்வு உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களின் உயர்வை அரசு கட்டுப்படுத்த தவறிவிட்டது. இந்த அரசு, பணம் சம்பாதிப்பதையே தன்னுடைய இலக்காக வைத்திருக்கின்ற காரணத்தால்தான், கடந்த முறை இலக்கா இல்லாத அமைச்சராக தொடர்ந்து கொண்டு இருக்கின்ற செந்தில் பாலாஜி வீட்டில் ரெய்டு நடந்தது. தற்போது, உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் ரெய்டு நடக்கிறது.