இந்த விபரீத யோசனைக்கு வித்திட்டது யார்?
பிரபல ஜெர்மன் விஞ்ஞானியான வால்தெர் நெர்னஸ்ட் (Walther Nernest) என்பவர், வெட்டப்பட்ட பள்ளங்களுக்குள் எதிரணி ராணுவத்தினர் மறைந்து கொண்டு செயல்பட்டதால்தான் ஜெர்மன் ராணுவத்தால் நினைத்த இலக்கை அடைய முடியவில்லை என்று கருதினார். கண்ணீர் வாயுவை அந்த பள்ளங்களுக்குள் பீய்ச்சி அடித்தால் வேறு வழி இல்லாமல் அவர்கள் வெளியே வருவார்கள். அப்போது தாக்குதல் நடத்துவது எளிது என்று ஜெர்மன் ராணுவ அதிகாரிகளுக்குப் பரிந்துரைத்தார். அதைப் பரிசோதித்துப் பார்க்கலாம் என்று தங்கள் தரப்பில் வெட்டப்பட்ட ஒரு குழியில் தங்கள் ராணுவத்தினரையே நிற்க வைத்து முயற்சி செய்தபோது, ஃப்ரிட்ஸ் ஹேபர் (Fritz Haber) என்ற மற்றொரு விஞ்ஞானிக்கு வேறொரு யோசனை தோன்றியது. குளோரின் வாயுவைச் செலுத்தினால் எதிரணியின் பாதிப்பு எக்கச்சக்கமாக இருக்குமே! அதுதான் நடைமுறைப்படுத்தப்பட்டது.
விஷவாயுவைச் சுவாசித்த பிரெஞ்சு வீரர்களின் நுரையீரல்கள் எரிந்து போயின. மிகக் கொடூரமான முறையில் அவர்கள் மரணம் அடைந்தனர். என்றாலும் இந்த விதத்தில் ஜெர்மனி அடைந்த ‘ வெற்றி’ அதிக நாள்களுக்கு நீடிக்கவில்லை. முக்கிய காரணம் காற்றின் திசையைத் துல்லியமாகக் கணிக்கமுடியவில்லை. இதனால் திடீரென்று காற்று எதிர்த் திசைக்குத் திரும்பி ஸேம் சைடு கோல் போட்டது. அதாவது ஜெர்மனி வீரர்களையே அது ஓரளவு பாதிக்கத் தொடங்கியது.
முதல் நாள் விஷவாயுவை எதிர்கொள்ள முடியாமல் நேச நாடுகள் அணி வெலவெலத்துப் போனது உண்மைதான். என்றாலும் உடனடியாக அதை எதிர்கொள்ளும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. நல்ல வேலையாக குளோரின் வாயு வெகு தொலைவில் வந்துகொண்டிருக்கும்போதே அதன் நாற்றம் அதைக் காட்டிக்கொடுத்துவிடும். எனவே அதற்குத் தகுந்த மாதிரி பாதுகாப்புகளைச் செய்துகொள்ள வாய்ப்பு உண்டு.