Chennai
oi-Noorul Ahamed Jahaber Ali
சென்னை: அமைச்சர் பொன்முடியை சாஸ்திரி பவனுக்கு அழைத்துச் சென்று விடிய விடிய விசாரணை நடத்திய அமலாக்கத் துறை அதிகாரிகள் 3 மணியளவில் விசாரணை நிறைவு செய்த நிலையில், அவரை கைது செய்யவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.
கரூர் மற்றும் சென்னையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி வீடு, அலுவலகம், தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அறை, சகோதரர் வீடு, அலுவலம் போன்றவை கடந்த மாதம் அமலாக்கத்துறை அதிகாரிகளால்அமலாக்கத்துறை தீவிர சோதனை மேற்கொண்டது. அதை தொடர்ந்து அன்றைய தினம் இரவே அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரை கைது செய்தனர். நேற்று அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
அதே நாளான நேற்று தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சராகவும், திமுகவின் மூத்த தலைவராகவும் இருக்கும் பொன்முடி மற்றும் அவரது மகனும் கள்ளக்குறிச்சி தொகுதி திமுக எம்.பியுமான கௌதம சிகாமணி ஆகியோருக்கு தொடர்புடைய இடங்களில் காலை முதல் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனையை தொடங்கினர்.
துணை ராணுவ பாதுகாப்புடன் விழுப்புரம் சண்முகபுரம் காலணி மற்றும் சென்னை சைதாபேட்டையில் உள்ள அமைச்சர் பொன்முடியின் வீடுகள், அவரது மகனும் திமுக எம்பியுமான கௌதம சிகாமணியின் அலுவலகம், பொன்முடிக்கு சொந்தமான கல்லூரி, அவரது இளைய மகன் அசோக் சிகாமணியின் மருத்துவமனை உட்பட அவருக்கு தொடர்புடைய 8 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபடத் தொடங்கினர்.
சென்னை வீட்டில் இருந்த அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி, அவரது மகன் அசோக் சிகாமணி ஆகியோரும் வீட்டிலேயே இருந்தனர். அங்கேயே அவர்களிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டார்கள். வங்கி அதிகாரிகளும் அமலாக்கத்துறை அதிகாரிகளுடன் பொன்முடி வீட்டுக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர்.
14 மணி நேரத்துக்கும் மேலாக நடந்த தீவிர சோதனையில் ரூ.70 லட்சம் மதிப்புள்ள பணம், வெளிநாட்டு கரன்சி போன்றவை கைப்பற்றப்பட்டு உள்ளதாக தகவல் வெளியானது. அதேபோல் அசோக் சிகாமணியின் 2 சொகுசு கார்களும் பறிமுதல் செய்யப்பட்டன. பொன்முடி வீட்டில் இருந்த பீரோ சாவி காணாமல்போனதால் மாற்று சாவி தயாரித்து அமலாக்கத்துறை சோதனையிட்டது.
13 மணி நேர தீவிர சோதனை மற்றும் விசாரணைக்கு பிறகு சோதனை குறித்த முழு விபரங்கள் கிடைத்ததால் அமலாக்கத்துறையினர் அமைச்சர் பொன்முடியை விசாரணைக்காக சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு காரில் அழைத்து சென்றனர்.
அமைச்சர் பொன்முடியை அவரது சொந்த காரிலேயே அழைத்து சென்ற அமலாக்கத்துறையினர், மற்றொரு காரில் அமலாக்கத்துறை காவல்துறையினருடன் சாஸ்திரி பவனுக்கு சென்றனர். அங்குள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் அதிகாரிகள் அவரிடம் விசாரிணை மேற்கொண்டு வருகின்றனர்.
விழுப்புரம் மற்றும் சென்னையில் பொன்முடிக்கு தொடர்புடைய இடங்களில் நடைபெற்ற சோதனை நிறைவடைந்த நிலையில் ரூ.41.9 கோடி வைப்புத் தொகை கைப்பற்றப்பட்டதாக அமலாக்கத்துறை தெரிவித்து உள்ளது. அதேபோல் இந்தோனேஷியாவில் உள்ள ஒரு சுரங்க நிறுவனத்துக்கு ரூ.100 கோடி அனுப்பப்பட்டதாகவும் அமலாக்கத்துறை அதிகாரிகள் விளக்கமளித்தனர்.
இந்த நிலையில் அதிகாலை 3 மணிக்கு பொன்முடியிடம் விசாரணையை அமலாக்கத்துறை அதிகாரிகள் நிறைவு செய்தனர். விசாரணை முடிந்து வெளியே வந்த அமலாக்கத்துறை துணை இயக்குநரிடம் பொன்முடியை கைது செய்ய உள்ளீர்களா என செய்தியாளர்கள் கேட்டபோது “நோ அரெஸ்ட் (கைது இல்லை)” என்று கூறிச் சென்றார். இதன் மூலம் அவரை கைது செய்யப்போவது இல்லை என்பது உறுதியாகி உள்ளது. விசாரணை முடிந்த பிறகு அதிகாலை 3.33 மணியளவில் அவர் புறப்பட்டு சென்றார்.
English summary
The officials of the Enforcement Department, who took Minister Ponmudi to Shastri Bhawan and conducted the investigation at dawn, said that they did not arrest him even though the investigation was completed around 3 o’clock.
Story first published: Tuesday, July 18, 2023, 3:38 [IST]