மத்தியில் ஆளும் பா.ஜ.க-வின் பதவிக்காலம் அடுத்தாண்டு நிறைவடையவிருக்கும் நிலையில், அதையடுத்து வரும் லோக் சபா தேர்தலில் பா.ஜ.க-வை வீழ்த்தியே ஆகவேண்டும் என்ற முனைப்பில் எதிர்க்கட்சிகள் ஒண்றிணைய திட்டம் தீட்டி வருகின்றன. அதன் முன்னோட்டமாக கடந்த மாதம் பீகார் தலைநகர் பாட்னாவில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில், காங்கிரஸ், தி.மு.க, ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் உட்பட 16 எதிர்க்கட்சிகள் பங்கேற்ற எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெற்றது.
அதன் தொடர்ச்சியாக நாளையும், நாளை மறுநாளும் (ஜூலை 17, 18) பெங்களூருவில் காங்கிரஸ் தலைமையில் இரண்டாவது எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெறவிருக்கிறது. இந்தக் கூட்டத்துக்கு, ஏற்கெனவே கலந்துகொண்ட கட்சிகள் அளவில் பார்க்கையில் சிறிய கட்சிகளான ம.தி.மு.க, வி.சி.க போன்ற பல கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. மொத்தமாக 24 கட்சிகள் இதில் கலந்துகொள்ளவிருக்கின்றன.
இந்த நிலையில், எதிர்க்கட்சிகள் கூட்டம் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்றும், மோடி வீழ்த்துவது தவிர அவர்களுக்கு வேறு நோக்கம் எதுவுமில்லை என்றும் கர்நாடக முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை விமர்சித்திருக்கிறார்.
கர்நாடகாவில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பசவராஜ் பொம்மை, “தேசிய அளவில் வலுவான எதிர்க்கட்சி இல்லை. பிராந்தியக் கட்சிகள் மட்டுமே இருக்கின்றன. எனவே எதிர்க்கட்சிகள் ஒரு கூட்டமைப்பை உருவாக்கி கூட்டங்களை நடத்துவதில் எந்த அரசியல் அர்த்தமும் இல்லை. அதனால் அவர்களுக்கு எந்தவொரு அரசியல் பயனும் விளையாது.
மோடியைத் தோற்கடிப்பது மட்டுமே அவர்களின் ஒரே நோக்கம். அது தவிர அவர்கள் ஒன்றிணைவதற்கான எந்தவொரு நோக்கமும் இல்லை. நாட்டின் பாதுகாப்பு, முன்னேற்றம், பொருளாதார வளர்ச்சி, கல்வி, சமூக வளர்ச்சி ஆகியவை மோடியால் மட்டுமே சாத்தியம் என்பதை மக்கள் நன்கு அறிவார்கள். எனவே இனிவரும் நாள்களில் இதுபோன்ற எதிர்க்கட்சிகள் கூட்டம் நடக்கலாம். ஆனால், அவை எத்தகைய தாக்கத்தையும் ஏற்படுத்தாது” என்று கூறினார்.