Chennai
oi-Mani Singh S
சென்னை: சென்னையில் உள்ள முக்கிய பூங்காக்களை சிங்கப்பூரில் உள்ள பூங்காக்களுக்கு நிகராக மேம்படுத்த தமிழக அரசு ஆலோசனை செய்து வருவதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இது பற்றிய விரிவான தகவலை இங்கே பார்க்கலாம்.
சென்னை போன்ற பெருநகரங்களில் மக்கள் இளைப்பாறவும் ஆசுவாசுப்படுத்தவும் முக்கிய இடமாக விளங்குவது பூங்காக்கள்தான். கான்கிரீட் கட்டிடத்திற்கு மத்தியில் நெருக்கடியான சூழலிலும் வசிக்கும் நகரத்து மக்கள் காலை மற்றும் மாலை வேளைகளில் நடைப்பயிற்சி போன்ற உடல் பயிற்சியில் ஈடுபடவும் வார இறுதி நாட்களில் குடும்பத்தினருடன் சென்று இளைப்பாறிவிட்டு வரவும் பூங்காக்களையே முக்கியமாக தேர்வு செய்கிறார்கள்.
இதனை கருத்தில் கொண்டு நகரின் பல முக்கிய இடங்களில் பூங்காக்களை தமிழக அரசு ஏற்படுத்தியுள்ளது. பூங்காக்கள் பராமரிப்பு, மேம்படுத்துதல் உள்ளிட்ட பணிகளிலும் சென்னை மாநகராட்சி தீவிர கவனம் செலுத்தி வருகிறது. குறிப்பாக சென்னையில் உள்ள பிராதான பூங்காக்களில் மக்களின் வசதியை கருத்தில் கொண்டு மேம்படுத்தும் பணிகளும் பராமரிப்பு பணிகளும் சிறப்பாக செய்யப்பட்டு வருவதை காண முடியும்.
சிங்கப்பூர் பூங்காக்கள் போல: ஒரு சில இடங்களில் பூங்காக்கள் உரிய பராமரிப்பு இன்றியும் மதுப்பிரியர்களின் கூடாரம் போல மாறிவருவதாகவும் பொதுமக்கள் ஆதங்கம் தெரிவிக்காமலும் இல்லை. இதனையும் களைந்து சீர் படுத்தும் பணிகளில் சென்னை மாநகராட்சி தீவிரம் காட்டி வருகிறது. இந்த நிலையில், தான் சென்னையில் உள்ள பூங்காக்களை சிங்கப்பூர் பூங்காக்கள் போல மாற்ற தமிழக அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அண்மையில் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் சிங்கப்பூர் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்தார். அப்போது சிங்கப்பூரில் உள்ள அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். அதற்கு அடுத்தபடியாக சிங்கப்பூர் அதிகாரிகள் தமிழகம் வருகை தந்து முதல்வரை சந்திப்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. முதல்வர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் சென்னையில் உள்ள பூங்காக்களை சிங்கப்பூர் மற்றும் மேலை நாடுகளுக்கு நிகராக தரம் உயர்த்தவும் தமிழக அரசு ஆலோசனை நடத்தியது.
செம்மொழி பூங்கா மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பில் உள்ள ஆயிரம் ஏக்கர் பரப்பில் பல்வேறு பூங்காக்களை வடிவமைக்க திட்டமிடப்படுள்ளதாகவும், செம்மொழி பூங்காவில் இருந்து நேரடியாக பாதை மூலம் எதிரே உள்ள பூங்காவிற்கு செல்லும் வகையில் வடிவமைப்புகள் மேற்கொள்ளப்படும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பூங்காக்கள் தரம் உயர்த்தும் இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால் பூங்காக்களின் அழகு இன்னும் மெருகேறும் என்பதில் சந்தேகம் இல்லை.
சென்னை மெட்ரோ பயணிகளுக்கு ரூ.2000.. ஆகா.. இது சூப்பரா இருக்கே! எப்படி வாங்குவது தெரியுமா?
சிங்கார சென்னை 2.0 திட்டம்: ஏற்கனவே சிங்கார சென்னை திட்டத்தின் கீழ் சென்னையில் முக்கிய சாலைகள் மாற்றம் செய்யப்பட்டு வருகின்றன. அதன் முதல் கட்டமாக சென்னையில் முக்கிய சாலைகள் பல்வேறு மாற்றங்களை பெற உள்ளன. சாலைகளை அகலப்படுத்துவது, சாலை ஓரம் புதிய அலங்கார அமைப்புகளை உருவாக்குவது போன்ற பல்வேறு மாற்றங்கள் ஏற்படுத்தப்பட உள்ளது. சிங்கார சென்னை 2.0 திட்டத்திற்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
லண்டனை சேர்ந்த கீ கார்ட்னஸ் அமைப்புடன் சேர்ந்து தாவரவியல் பூங்கா அமைக்கப்படும். சென்னை அருகே ரூ.300 கோடி செலவில் தாவரவியல் பூங்கா அமைக்கப்படும். அதேபோல் துறைமுக நகரங்கள் திட்டத்துக்கு 1,825 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வரிசையில் தற்போது பூங்காக்களையும் மேம்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக வெளியாகி இருக்கும் தகவல் மக்களுக்கு பெரும் எதிர்பார்ப்பை கொடுத்துள்ளது.
English summary
It has been reported that the Tamil Nadu government is consulting to develop major parks in Chennai to match the parks in Singapore. Detailed information about this can be found here.
Story first published: Sunday, July 16, 2023, 19:45 [IST]