Chennai
oi-Shyamsundar I
சென்னை: மாவீரன் படத்தில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு இடிந்து விழுவது கதையாக வைக்கப்பட்டு உள்ளது. இந்த படத்தில் வரும் சில காட்சிகள் சென்னையில் நிஜ வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் ஆகும்.
இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் மாவீரன் படம் வெளியாகி உள்ளது. சிவகார்த்திகேயன் படங்களில் மிகப்பெரிய ஓப்பனிங் கொண்ட படமாக, சிவகார்த்திகேயன் அதிகம் நம்பும் படமாக இது பார்க்கப்படுகிறது. அதிதி ஷங்கர், மிஷ்கின், சரிதா, யோகி பாபு மற்றும் வாய்ஸ் கொடுத்த விஜய்சேதுபதி என்று பெரிய டீம் இந்த படத்திற்காக வேலை செய்துள்ளது.
படத்திற்கு தொடக்கத்தில் இருந்து நல்ல ரிவ்யூ வர தொடங்கி உள்ளது. சென்னையில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு இடிந்து விழுவது தொடர்பாகவும், அதை ஹீரோ எப்படி தடுக்கிறான் என்பதை அடிப்படையாக வைத்தும் இந்த படம் எடுக்கப்பட்டு உள்ளது. மாவீரன் எப்படி மக்களை காக்கிறான் என்பதை மிக சுவாரசியமாக மாடோன் அஸ்வின் காட்சிப்படுத்தி இருக்கிறார். இந்த படத்தில் வரும் சில காட்சிகள் சென்னையில் நிஜ வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் ஆகும்.
கட்டிடம் இடிந்து விழுந்தது: கடந்த 2021 டிசம்பர் மாதம் சென்னை திருவொற்றியூரில் இருக்கும் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு வீடுகள் இடிந்து விழுந்தது. இந்த சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது. வெறும் 20 வருடங்கள் கூட ஆகாத அடுக்குமாடி குடியிருப்புகள் பொத்தென்று இடிந்து விழுந்தது மக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளின் தரம் மீதான கேள்வியை இந்த சம்பவம் எழுப்பியது. சென்னை திருவொற்றியூர் அருகே உள்ள அரிவாக்குளம் பகுதியில் 1993ல் கட்டப்பட்டு 1998ல் மக்கள் பயன்பாட்டிற்கு வந்த குடிசை மாற்று வாரிய கட்டிடம்தான் இடிந்து விழுந்தது.
இங்கு மக்கள் வசிக்கும் பி பிளாக்கில் விரிசல் ஏற்பட்ட நிலையில் அங்கு 24 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு அப்படியே இடிந்து கீழே விழுந்தது. இந்த நிலையில்தான் இந்த இடிபாட்டிற்கு முன் 24 குடும்பங்களை திமுக நிர்வாகி ஒருவர் காத்த சம்பவம் மக்கள் இடையே பாராட்டுகளை பெற்றது.
என்ன நடந்தது?: கட்டிடம் இடிவதற்கு முதல் நாளே பி பிளாக்கில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு வசித்த மக்கள் அதை பற்றி பெரிதாக கவலைப்படாமல் உறங்க சென்றுள்ளனர். இதையடுத்து அதிகாலையில் விரிசல் பெரிதாகி உள்ளது. உடனே அப்பகுதி திமுக வட்டசெயலாளர் தனியரசுவிற்கு அதிகாலையில் தகவல் சென்றுள்ளது.
திமுக வட்டசெயலாளர் தனியரசு தகவல் கேட்டதும் அங்கு திமுக நிர்வாகிகளை அழைத்துக் கொண்டு வந்து பார்வையிட்டு இருக்கிறார். காலையிலேயே வந்து கட்டிடத்தை பார்த்தவர் 4வது மாடியில் ஆய்வு செய்து இருக்கிறார். அப்போது கட்டிடத்தில் விரிசல் பெரிதானதை தனியரசு கவனித்து இருக்கிறார். அதோடு கட்டிடத்தின் உள்ளே மண் விரியும் சத்தமும் கேட்டு இருக்கிறது.
கட்டிடம் மிக மிக லேசாக குலுங்க தொடங்கியதையும் கவனித்து இருக்கிறார் தனியரசு. இதனால் உடனே சுதாரித்த தனியரசு மின்னல் வேகத்தில் ஒவ்வொரு மாடியாக சென்று.. 24 வீடு கதவுகளையும் தட்டி அம்மா வெளியே வாங்க.. அம்மா சீக்கிரம் எல்லாத்தையும் எடுத்துக்கிட்டு வெளியே போங்க என்று கத்தி இருக்கிறார். அப்போது அங்கு 75 -80 பேர் இருந்துள்ளனர்.
பல பெண்கள், வயதானவர்கள் இருந்துள்ளனர். மக்களை பதற்றத்திற்கு உள்ளாக்க கூடாது என்பதால் கட்டிடம் உடைய போகிறது என்று மட்டும் சொல்லாமல்.. பாதுகாப்பிற்கு கீழே செல்லுங்கள்.. பிறகு பார்க்கலாம் என்று கூறி உள்ளார். கொஞ்சம் திட்டிதான் பலரை வெளியேற்ற வேண்டி இருந்துள்ளது.
இந்த நிலையில்தான் இவர் எல்லோரையும் வெளியேற்றிய சில நிமிடங்களில் மொத்தமாக அந்த கட்டிடம் விழுந்து தரைமட்டமானது. மின்னல் வேகத்தில் செயல்பட்ட இவரின் செயலால் அந்த கட்டிடம் இடிந்த போது ஒருவரும் பலியாகாமல் எல்லோரும் காப்பாற்றப்பட்டனர். இவரின் செயலால் 24 குடும்பங்கள் காப்பற்றப்பட்டுள்ளன. அப்பகுதி மக்கள் இவரின் கையை பிடித்து கண்ணீரோடு நன்றி தெரிவித்த சம்பவம் அப்போது பெரிய அளவில் கவனம் பெற்றது.
இதே சம்பவம் தற்போது மாவீரன் படத்தில் கிளைமேக்ஸ் காட்சிகளில் வைக்கப்பட்டு உள்ளது. நிஜ சம்பவம் தத்ரூபமாக காட்சிபடுத்தப்பட்டது பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
English summary
Do you the real MAAVEERAN story? Who is the inspiration for Siva Karthikeyan’s recent blockbuster?
Story first published: Sunday, July 16, 2023, 10:58 [IST]