`உச்ச நீதிமன்றம் தெரிவித்திருப்பதை மனதில்வைத்து, ஆளுநர் செயல்பட வேண்டும்!' – முதல்வர் ஸ்டாலின்

Whatsapp Image 2023 12 30 At 6 55 30 Pm.jpeg

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் ஆர். என்.ரவி நிலுவையில் வைத்திருப்பதாகவும், அவற்றுக்கு ஒப்புதல் அளிக்க காலவரம்பு நிர்ணயம் செய்யக் கோரியும் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு, இந்த விவகாரம் தொடர்பாக ஆளுநர் ரவி, முதல்வர் ஸ்டாலினை நேரில் அழைத்துப் பேசுமாறு அறிவுறுத்தியிருந்தது. இந்த நிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை, முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சந்தித்துப் பேசினார்.

முதல்வர் ஸ்டாலின் – ஆளுநர் ரவி

அது தொடர்பாக தமிழ்நாடு அரசு சார்பில் வெளியான அறிக்கையில், “தமிழ்நாடு ஆளுநர், தமிழ்நாடு அரசின் சார்பில் அனுப்பப்பட்ட மசோதாக்கள் மற்றும் கோப்புகளுக்கு நீண்ட காலமாக ஒப்புதல் அளிக்காமல் நிலுவையில் வைத்திருப்பது தொடர்பாக முதலமைச்சர் ஆளுநருடன் ஆலோசனை நடத்திட வேண்டுமென்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்ததன் அடிப்படையில், தமிழ்நாடு முதலமைச்சர் நேற்று (30.12.2023) ஆளுநர் மாளிகையில், ஆளுநரைச் சந்தித்தார்.

அப்போது, பல மாதங்களாக ஆளுநர் மாளிகையில் நிலுவையில் இருக்கும் பல்வேறு கோப்புகளுக்கு விரைந்து ஒப்புதல் அளித்து, அரசுக்கு அனுப்பி வைத்திட வேண்டுமென்று முதலமைச்சர் ஆளுநரிடம் வலியுறுத்தினார். அதே போன்று, தமிழ்நாடு சட்டமன்றம் மீண்டும் நிறைவேற்றி அனுப்பிவைத்த 10 முக்கியமான மசோதாக்களை, அரசியல் சாசனத்தில் எங்கும் குறிப்பிடாத வகையில், தேவையின்றி குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பி வைத்துள்ளதைத் திரும்பப் பெற்று, அவற்றிற்கும் விரைந்து ஒப்புதல் அளித்து, அரசுக்கு அனுப்பி வைத்திடவும் ஆளுநரை முதலமைச்சர் கேட்டுக் கொண்டார்.

முதல்வர் ஸ்டாலின்

ஊழல் வழக்குகளில் சம்மந்தப்பட்டுள்ள அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் கே.சி.வீரமணி மற்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு தொடர அனுமதி கோரி அனுப்பப்பட்ட கோப்புகளும் பல மாதங்களாக ஆளுநர் வசம் நிலுவையில் உள்ளன. அவற்றிற்கும் விரைந்து ஒப்புதல் வழங்க வலியுறுத்தப்பட்டது. இதில் கே.சி.வீரமணி தொடர்பான கோப்பினை 15 மாதங்களுக்கு மேலாகவும், எம்.ஆர். விஜயபாஸ்கர் தொடர்பான கோப்பினை 7 மாதங்களுக்கு மேலாகவும் ஆளுநர் அவர்கள் நிலுவையில் வைத்துள்ளதும் சுட்டிக்காட்டப்பட்டது.

மேலும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள உறுப்பினர் பதவிகளுக்கு உறுப்பினர்களை நியமனம் செய்வது தொடர்பான கோப்பும், நீண்ட காலமாக ஆளுநர் மாளிகையில் நிலுவையில் உள்ளது குறித்தும் தெரிவிக்கப்பட்டு, அவற்றிற்கு ஒப்புதல் அளித்து திரும்ப அனுப்பிவைக்க கேட்டுக்கொள்ளப்பட்டது. பொதுவாக, அரசியல் சாசன விதிகளுக்குட்பட்டு ஆளுநர் செயல்பட வேண்டுமென்றும், அப்போதுதான் மாநில மக்களின் நலனுக்கும், நிர்வாகத்திற்கும் பயனளிக்கக்கூடிய வகையில் ஆளுநர் செயல்பாடு அமையும் என்றும் முதலமைச்சர் ஆளுநரிடம் எடுத்துரைத்தார்.

ஆளுநருடன் முதல்வர் சந்திப்பு

நிலுவையில் உள்ள மசோதாக்கள் மற்றும் கோப்புகள் தொடர்பாக ஆளுநர் கோரிய அனைத்து விவரங்களும், சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் மற்றும் அலுவலர்களால் ஆளுநருக்கு நேரிலும், எழுத்துபூர்வமாகவும் அளிக்கப்பட்டுள்ள நிலையில், உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ள கருத்துகளை ஆளுநர் மனதில்கொண்டு, நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கும், கோப்புகளுக்கும் உரிய காலத்தில் ஒப்புதல் வழங்கிட வேண்டுமென்றும், வருங்காலங்களில் இது போன்ற தாமதங்களை ஆளுநர் தவிர்த்திட வேண்டுமென்றும் என முதலமைச்சர் ஆளுநரைக் கேட்டுக் கொண்டார்” எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *