பெத்லகேம்(Bethlehem) என்னும் நகரம் இயேசு கிறிஸ்துப் பிறந்த இடமாகக் கிறிஸ்தவர்களால் நம்பப்படுகிறது. இந்த நகரம் பாலஸ்தீனத்தின் மேற்குக் கரை (West Bank) என்னும் பகுதியில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்துக்காக ஆயிரக்கணக்கான பயணிகள் இந்தப் பகுதிக்கு வந்து, கிறிஸ்துமஸ் விழாவைக் கொண்டாடுவார்கள். சுற்றுலாப் பயணிகளுக்காகவே, பிரமாண்டமான கிறிஸ்துமஸ் மரம், அலங்கார விளக்குகள், நட்சத்திர விடுதிகள், நினைவுப் பரிசுக் கடைகள் என அந்தப் பகுதியே பெரும் உற்சாகத்துடன் காணப்படும்.
இன்று இயேசு பிறந்த தினமான கிறிஸ்துமஸ் விழா உலகம் முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. ஆனால், இஸ்ரேல் – ஹமாஸ் போர் காரணமாக பெத்லகேம் மட்டும் வெறிச்சோடி காணப்படுகிறது. இஸ்ரேலின் இராணுவத் தாக்குதலால் மேற்குக் கரையில் வன்முறை அதிகரித்திருக்கிறது. இது அந்தப் பகுதி மக்களை பெரும் பதற்றத்துக்குள்ளாகியிருக்கிறது. இதன் காரணமாகச் சுற்றுலாப் பயணிகளின் வருகையும் முற்றாக நின்றுவிட்டது.
அந்தப் பகுதி கிறிஸ்தவர்கள் ஆர்ப்பாட்டம் இல்லாமல் அமைதியான முறையில் கிறிஸ்துமஸ் விழாவைக் கொண்டாடி வருகிறார்கள். இது குறித்து சர்வதேச ஊடக நிறுவனத்திடம் பேசிய பெத்லகேம் பகுதியைச் சேர்ந்தவர், “இஸ்ரேல் – ஹமாஸ் போரும், அப்பாவி மக்கள் கொல்லப்படுவதும் நிறுத்தப்பட வேண்டும். இந்தப் போரின் விளைவுகளை வெளியுலகுக்குக் காண்பிக்க வேண்டும் என்பதற்காக மெழுகுவர்த்தி ஏற்றி அமைதியாகப் பிரார்த்திப்பது என முடிவு செய்யப்பட்டது” எனத் தெரிவித்திருக்கிறார்.
பெத்லகேமின் அலெக்சாண்டர் ஹோட்டல் உரிமையாளர் ஜோயி கனவதி என்பவர், “எங்களிடம் எந்த விருந்தினரும் தங்குவதற்கு வரவில்லை. இது எங்களுக்கு மிகவும் மோசமான கிறிஸ்துமஸ். பெத்லகேம் ஆலயம் கிறிஸ்துமஸ் தினத்திலும் மூடப்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ் மரம் இல்லை, மகிழ்ச்சி இல்லை, கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்துக்கான எந்த அறிகுறியும் இல்லை. அக்டோபர் 7-ம் தேதிக்கு முன், கிறிஸ்மஸுக்காக எனது ஹோட்டல் அறைகள் முழுவதும் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டது. ஆனால் போர் தொடங்கியதும் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது.
எங்கள் உணவகத்தில் ஒவ்வொரு இரவும் குறைந்தது 120 பேர் இரவு உணவு சாப்பிடுவார்கள். எப்போது உணவகமும் நிரம்பியிருந்தது. ஆனால் இப்போது அப்படி யாரும் வருவதில்லை” என சோகமாகத் தெரிவித்தார்.
பெத்லகேமின் மேங்கர் சதுக்கம், கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களுக்கான மையப் புள்ளி சர்ச் ஆஃப் தி நேட்டிவிட்டி. அந்தப் பகுதியில் பரிசுப் பொருள்களை விற்கும் ரோனி தபாஷ் என்பவர், “யாரும் கடைக்கு வரமாட்டார்கள் என்பதைத் தெரிந்தும் கடையைத் திறந்து வைத்திருக்கிறேன். எந்த சுற்றுலாப் பயணிகளும் இல்லாமல் கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாகக் காத்திருக்கிறோம்” என்றார்.
காஸாவில் உள்ள கத்தோலிக்க ஹோலி சர்ச்சில் உள்ள கன்னியாஸ்திரி நபீலாஷாலா, “இந்த ஆண்டு துயரம் ஏற்பட்டதால் கிறிஸ்துமஸ் கொண்டாடவில்லை, ஆலய மணி ஓசைக்குப் பதில் டாங்கிகள் குண்டுகளை வெடிக்கும் சப்தம் கேட்கிறது. இதன் மத்தியில் எங்களால் எப்படி கிறிஸ்துமஸ் கொண்டாட முடியும். போர் விரைவில் முடிவுக்கு வர பிராத்திக்கிறேன்”என்றார்.
பாலஸ்தீனத்தில் நடந்த கிறிஸ்துமஸ் பிரார்த்தனைக் கூட்டத்தில் பேசிய ஃபாதர் முந்தர் ஐசக், “காஸாவில் என்ன நடக்கிறது என்பதைக் கண்டு நீங்கள் திகைக்கவில்லை என்றால்… உங்கள் மனிதாபிமானத்தில் ஏதோ தவறு இருக்கிறது என்று பொருள்… பாலஸ்தீன மக்களாகிய நாங்கள் மீண்டு வருவோம்… ஆனால் இதற்கு உடந்தையாக இருப்பவர்களுக்காக நான் வருந்துகிறேன். இந்தப் பாவங்களிலிருந்து அவர்கள் மீண்டு வருவார்களா?” எனக் கேள்வி எழுப்பினார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.