ஜோதிடம்

1169377.jpg

சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்) சிம்ம ராசி அன்பர்களே… ராசியின் பெயருக்கேற்ப சிங்கதிற்கே உரிதான கம்பீரமான தோற்றம் உங்களுக்கு அமைந்திருக்கும் என்பதுடன் எதிர்ப்புகள், இன்னல்கள் எதுவாயினும் தாங்கிக் கொண்டு செயல்படக்கூடிய மன உறுதியும் உங்களிடம் அமைந்திருக்கும் அதேவேளையில் அண்டியவர்களை ஆதரித்து அன்பு காட்டும் இரக்க குணத்திலும் உங்களை மிஞ்ச ஆளில்லை என்பதும் உண்மை. அதாவது வம்புச்சண்டைக்கு போகமாட்டீர்கள். ஆனால் வந்த சண்டையை எளிதில் விட மாட்டீர்கள். எதிரிகளை ஊடுருவி கண்டறிந்து தக்கபடி நடந்துக்கொள்ளும் பண்பும் அறிவாற்றலும் , செயலாற்றலும் மிக்கவர்களான நீங்கள் உங்களிடம் இயல்பாக உள்ள பிடிவாத குணத்தை மட்டும் ஓரளவு மாற்றிக் கொண்டால் உங்களுக்கு எதிரிகளே இருக்க மாட்டார்கள் என்பதை புரிந்து கொண்டால் உங்கள் வாழ்வுக்கும் சரி உடல் நலத்திற்க்கும் சரி மிகப்பெரும் பாதுகாப்புக் கவசமாக இருக்கும். இந்த வருடம் உங்களுக்கு நடைபெற இருக்கும் பலன்களை இனி பார்ப்போம்.

இந்த ஆண்டில் குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். பணம் எதிர்பார்த்த அளவுக்கு வந்து கொண்டிருக்கும். உங்களின் முயற்சிகளைச் செம்மைப்படுத்தி காரியங்களை ஆற்றி வெற்றி பெறுவீர்கள். புதிய சேமிப்புத் திட்டங்களிலும் ஈடுபடுவீர்கள். சிலர் புதிய வீடு வாங்கி கிரகப்பிரவேசம் செய்வார்கள். உங்களின் அசாத்திய துணிச்சலால் செயற்கரிய சாதனைகளைச் செய்வீர்கள். மறக்க முடியாத விதத்தில் அரசு வழியில் சில சலுகைகள் கிடைக்கும். முக்கியமானவர்களுடன் பேசும்போது உங்கள் அறிவாற்றலை வெளிப்படுத்தும் வாய்ப்புகள் உண்டாகும். கொடுத்த வாக்கை எப்பாடுபட்டாவது காப்பாற்றி விடுவீர்கள். மேலும் உங்களிடம் மற்றவர்கள் சொன்ன ரகசியங்களையும் காப்பாற்றுவீர்கள். இதனால் நண்பர்களின் நன்மதிப்பைப் பெறுவீர்கள். அதே நேரம், இந்த காலகட்டத்தில் உங்களிடம் பணம் பெற்றவர்கள் நன்றி பாராட்டுவது குறைவாகவே இருக்கும். மேலும் உடல் உபாதைகளை அலட்சியப்படுத்தினால் பெரிய மருத்துவச் செலவுகள் செய்யுமாறு நேரிடலாம்.

உத்தியோகஸ்தர்களுக்கு: உயரதிகாரிகளின் ஆதரவோடு, எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு போன்ற நற்பலன்களை எளிதில் பெற்று மகிழ்வீர்கள். மனநிறைவு பெறும் வகையில் மறைமுக வருமானங்கள் பெருகும். சிலர் விருப்ப ஓய்வின் மூல உத்தியோகத்திலிருந்து விலகி தொழிலிலோ, வியாபாரத்திலோ ஈடுபட முனையக்கூடும். குடும்பத்தில் நிம்மதியான சூழ்நிலை நிலவி வரும். வேலை நிமித்தமாக வெளியூர் பயணங்கள் ஏற்படக்கூடும். தனியார் நிறுவனத்தில் பணியாற்றுவோரும் சம்பள உயர்வுகள் போன்ற சலுகைகள் பெற்று மகிழ்ச்சியடைக்கூடும். சிலர் வேலையில் இருந்து கொண்டே தொழில் ஒன்றைத் தொடங்கி உபரி வருமானத்துக்கு வகை செய்து கொள்வீர்கள். சொந்த வீடு இல்லாமல் இதுவரை இருந்த சிலர் சொந்த வீடு அரசு குடியிருப்பு போன்ற ஏதேனும் வசதிகளைப் பெற்று மகிழக்கூடும்.

வியாபாரிகளுக்கு: உங்களுக்கு வாடிக்கையாளர்களின் ஆதரவு தொடர்ந்து நல்லமுறையில் இருந்து வரும். நீங்கள் தரமான பொருள்களை விநியோகம் செய்து வருவதன் காரணமாக புதிய வாடிக்கையாளர்களும் உங்களை நாடி வருவார்கள். நீங்கள் வியாபார ஸ்தலத்தை விரிவுபடுத்தவும், வேறு புதிய இடத்திற்கு மாற்றவும் அல்லது கிளைகளைத் திறக்கவும் முயற்சி செய்து வாடிக்கையாளர்களுக்கு விநியோகம் செய்து அதிக அளவில் இருப்பு வைக்காமல் இருந்தால், உங்களுக்கு நஷ்டம் ஏற்பட வாய்ப்பேயில்லாமல், முழுமன நிறைவு கிட்டும் வகையில் திருப்திகரமான ஆதாயம் கிடைத்து வருவதில் தடையே இருக்காது. கணிசமான லாபமும் அதிக கையிருப்பும் இருப்பதன் மூலம் மனைவியின் பெயரில் சொந்த வீடு வாங்கும் அமைப்புண்டு.

கலைத்துறையினருக்கு: வாய்ப்புகளைத் தேடி நீங்கள் பலரைச் சந்திக்கச் சென்ற நிலைமாறி வாய்ப்பு தரும் நோக்கில் பல முன்னனி நிறுவனங்கள் தாமே உங்களைத் தேடி வந்து வாய்ப்பு கொடுக்கும் நிலை உண்டு. உங்கள் திறமைகள் முழுவதையும் வெளிப்படுத்தி ரசிகர்களின் அபிமானத்தையும் ஆதரவையும் பெருவாரியாகப் பெறுவீர்கள். உங்கள் பெருமையும் , புகழும் நாடெங்கும் நன்கு பரவும். உங்கள் அந்தஸ்தையும் உயர்த்திக் கொள்ளும் நிலை உண்டு. இதுவரை பகைமை காட்டி வந்த சில கலைஞர்களும் கூட உங்களைத்தேடி வருவார்கள். நீண்ட தூர வெளிநாட்டுப் பயணங்கள் சிலருக்கு அமையக்கூடும்.

மாணவர்களுக்கு: கல்வியில் அதிக மதிப்பெண்கள் பெற்று, ஆசிரியர்களின் பராட்டுகளைப் பெறுவீர்கள். கல்வி சலுகைகள் பெறக்கூடிய வாய்ப்பு உண்டு. விளையாட்டு, போட்டிகள் போன்றவற்றிலும் பரிசுகளைப் பெற்று மகிழ்வீர்கள்.அயல் நாட்டுப் பயண வாய்ப்புகளும், உயர் படிப்புக்காக வெளிநாடுகளுக்குச் செல்லக் கூடும். படிப்பு முடிவடைவதற்கு முன்னரே சிலருக்கு வேலை வாய்ப்பு முன்வரக்கூடும்.

அரசியல்வாதிகளுக்கு: உங்கள் தன்னலமற்ற தொண்டுக்குப் பாரட்டுகள் குவியும். தலைமையின் நன்மதிப்பையும் தொண்டர்களின் பெரும் ஆதரவையும் பெற்றுள்ள உங்கள் செல்வாக்கும் சொல்வாக்கும் உங்களுக்குத் தனி மரியாதையைப் பெற்றுத் தரும். பொறுப்பான பதவிகள் சில உங்களைத் தேடிவரும் உங்கள் பொருளாதார நிலையும் நல்ல முறையில் வளர்ச்சியடையும். வங்கிக் கணக்கில் சேமிப்பு பெருகும். வீடு,மனை, வண்டி,வாகன வசதிகளைக் குறைவில்லாமல் பெற்று களிப்பில் திளைப்பீர்கள்.

பெண்களுக்கு: வீட்டுக்குத் தேவையான நவ நாகரிகப் பொருள்களை வாங்கி வீட்டை அழகுபடுத்துவீர்கள். புத்திர வழியில் மகிழ்ச்சிதரும் நிகழ்ச்சிகள் நடைபெற இடமுண்டு. குடும்பத்தின் முன்னேற்றத்திற்காகவும் நிம்மதிக்காகவும் பெருமளவில் பாடுபடும் உங்கள் மீது அனைவருமே அன்பு செலுத்த முன்வருவார்கள். குடும்ப பிரச்சினைகள் வெளியில் தெரியாமல் எதையுமே பக்குவமாக சமாளிப்பீர்கள். ஆடை, ஆபரணச் சேர்க்கை, உறவினர் வருகை எல்லமே உங்கள் மகிழ்ச்சியைப் பெருக்கும் வகையில் அமையும். சிலர் மனம்போல மாங்கல்யம் அமையப் பெறுவீர்கள். உங்கள் பிறந்த வீட்டு வகையில் உங்கள் கணவருக்குப் பெரிதும் துணையாயிருக்கும்.

நட்சதிர பலன்கள்> மகம்: உங்கள் மனதில் பல்லாண்டுகாலமாகத் திட்டுமிட்டு வந்தவை எல்லாம் இப்போது நடைபெறக் காண்பீர்கள். பெரும்பாலும் வீடு, மனைகளாகத்தான் அவை இருக்கும். ஏற்கனவே சொந்த வீட்டில்தான் இருக்கக் கூடுமாயினும் இப்போது மனைவியின் பெயரில் மேலும் ஒரு வீட்டை வாங்கக்கூடிய முயற்சியில் ஈடுபட்டு வெற்றியும் காண்பீர்கள். குடும்பத்தில் எந்த வகையிலும் குதூகலத்திற்குக் குறைவிருக்காது. எதிர்பாராத தனவரவுகள் சிலருக்கு உண்டு. உங்கள் திட்டங்களில் ஒன்றிரண்டு வெற்றி பெறத் தவறுமாயினும், வெற்றி பெறும்வரை சளைக்காமல் அதற்கெனப் போராடி இறுதியில் வெற்றியைப் பெற்று மகிழ்வீர்கள். உடல்நிலை சீராக இருந்து வரும். அக்கம்பக்கத்தாரிடம் அளவுடன் பேசி நிறுத்திக்கொள்வது நல்லது. அரசியல்வாதிகளின் பெருமை பன்மடங்காக பெருகும்.

பூரம்: தொழில், வியாபாரத்தில் சிறப்பான முன்னேற்றம் காண்பீர்கள் என்பதால் பண புழக்கத்தில் மிகத் திருப்திகரமான நிலை காணப்படும். குடும்பத்தில் அனைவரின் தேவைகளையும் நிறைவேற்றி மகிழ்வித்து மகிழ்வீர்கள். குடும்பத்தில் சுபநிகழ்ச்சியை மிகச் சிறப்பாக நடத்தி வைத்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்துவீர்கள். பிரிந்து சென்ற உறவினர் திரும்பி வந்து சேருவார்கள். மற்றவர்களுக்கு பெருமளவில் உதவியும் செய்வீர்கள். மாணவமணிகள் எல்லா வகையிலும் சிறப்பான முன்னேற்றத்தைப் பெற்று மகிழ முடியும். மற்றவர்களும் இதற்கு உறுதுணையாக இருந்து ஊக்குவிப்பார்கள். பயணங்களின் போது மட்டும் கவனம் தேவை.

உத்திரம் 1 ம் பாதம்: உத்தியோகஸ்தர்கள் அலுவலக விஷயங்களில் பெரும் நற்பலன்களை எதிர்பார்க்கலாம் என்றாலும் பண புழக்கம் உள்ள பணிகளில் உள்ளவர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் செயல்படுவது அவசியம். அரசு வழியில் சில அனுகூலங்களை எதிர்பார்க்கலாம். தேவையில்லாமல் கடன் வாங்குவதைத் தவிர்த்து விடுவது நல்லது. வியாபாரத்தில் பெரும் முன்னேற்றம் உண்டாக இடமுண்டு என்பதால் அதைக் கொண்டு விரிவுபடுத்தினால் போதுமானது. கடன் வாங்கி அகலக்கால் வைக்காதீர்கள். கடிதப் போக்குவரத்து நன்மை தரும். வாகனங்களை ஓட்டிச் செல்பவர்கள், வேகத்தைக் குறைத்து நிதானமாகச் செல்வதே விவேகமாகும்.

பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமையில் சிவன் கோவிலை 11 முறை வலம் வரவும். பிரதோஷ காலத்தில் நந்தீஸ்வரரை வணங்குவதும் வாழ்க்கையில் முன்னேற்றத்தை தரும். சமூகத்தில் அந்தஸ்து அதிகாரம் கிடைக்க பெறும் | சொல்ல வேண்டிய மந்திரம்: “ஓம் நமசிவய” என்ற மந்திரத்தை தினமும் 9 முறை சொல்லவும் | விளக்கு பரிகாரம்: வீட்டில் தினமும் ஐந்து ஒரு முக மண் அகல் விளக்கு நல்லெண்ணை விட்டு ஏற்றவும் | அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9 | அதிர்ஷ்ட ஹோரைகள்: சூரியன், செவ்வாய், புதன், குரு | அதிர்ஷ்ட திசைகள்: கிழக்கு, தெற்கு | அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: ஞாயிறு, செவ்வாய்; தேய்பிறை: ஞாயிறு, வியாழன் | + பணவரவு | – சொத்துகளில் பிரச்சினை

– பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்




ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை ‘இந்து தமிழ் திசை’யின் கருத்துகள் அல்ல.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *